கதை  சொல்லி 


காலம் 

ஒரு கதை சொல்லி 

சிறுகதையாய் , நெடும் தொடராய் 

முடிவின்றி தொடரும் கதைகளாய் !!

ஆணவ மனிதன் 

அடங்கிய காலங்களில் 

ஆகாரம் வேண்டிய தவிப்பும் கதைகளாய்!

தொலைந்த நட்பும் 

தொலைத்த உறவுகளும் 

காரணங்கள் தேடி தொடரும் கதைகளாய் !

இறைத்த சோளிகளின் எண்ணிக்கை 

பரமபத்தின் கட்டங்களில் 

காத்திருக்கிறது சிதறிய சிறுகதைகளாய் !

தாண்டிய நொடிகளும் 

தொடரும் நிமிடங்களும் 

திறக்காத பக்கங்களின் வழியாய் 

காத்திருக்கிறது கதைகளுடன் !!

செல்ல திருடன்

எப்படி இருக்கிறான்
உயிர் திருடன்!

எச்சிலோடும் சிரிப்பில்
அடம்பிடிக்கும் அழுகையில்
விழுந்தெழும் நடையில்
உயிர் திருடிய திருடன்!

என் தேவதையை
அன்னையென திருடிய திருடன்
இப்பொழுது என்னையும் திருடுகிறான்!

இவன்
இல்லாத நாட்களில்
வீடும் வெறுமையற்று
நானும் வெற்றிடமாய் தோற்கிறேன்!

கிறுக்கல் இல்லாத சுவர்கள்
உடைக்காத உன் பொம்மைகள்
சாதம் இறைக்காத மேஜை
குட்டிகுட்டியாய் ஆடைகள்
உலர்த்தாத கொடிக்கயிறு
முக்கியமாய்
நீ நனைக்காத படுக்கை

மௌனமாய் காத்திருக்கிறது
உன் அப்பாவை போலவே
ராஜகுமாரன்
திரும்பி வரும் நாளுக்காக...

தையதக்கா

தையதக்க தையதக்கா
சந்சோச கூச்சலிட
தங்க மகன் பிறந்தான்!

பிள்ளைக்காக கலங்கிய காலங்கள்
மழைக்
கால மேகங்களாய் கரைய
தேவனாய் பிறந்து வந்தான் !

கண் பட்டுவிடுமோயென
உன் தாலட்டுகளை
மௌனமாய் இசைத்தோமடா !

இனி
பால் வாசம் வீசும் தலையணைகளும்
சிறுநீரால் நனைந்த
படுக்கை விரிப்புகளும்
முகமெங்கும் நனைத்திடும் முத்தங்களும்
சி்ன்னஞ்சிறு செய்கையில்
நெகிழ்ந்து நீளும் நிமிடங்களும்
எங்களுக்கும் சொந்தமாகும் செல்லமே!

எந்திர வாழ்க்கையின்
மனித படிமங்களுக்கு மத்தியில்
எங்களிருவரின்
ஒற்றை உலகம் நீயடா

உனக்காக உறங்காத இரவுகளில்
ஆனந்த கண்ணன் நீயுறங்க
எங்களின் வாழ்க்கை கதைகள் தாலாட்டாய்

உன் விரல் ரேகையில்
எங்களின் வாழ்க்கை பயணம்
உந்தன் புன்சிரிப்பில்
எங்களின் உயிர் சிரிப்பு

சின்னஞ்சிறு ஆசைகளை
தர மறுத்த இறைவன்
சந்தோச பொக்கிஷத்தை
உள்ளங்கையில் தந்துவிட்டு
என்ன பெயரென சிரித்தான்
நன்றியும் கர்வமுமாய் சொன்னோம்
தனஞ்ஜெய் எனும் ஜித்து என...

சபிக்கப்பட்டவனாய்


நிலாப்பெண்ணின் விசும்பல்களில்
மொட்டை மாடி கவிதைகள்
வானம் பார்த்தபடி வெறுமையாய்

கனவுப்பெண்ணின் கண்ணீரில்
இரவுத் தூக்கங்கள்
கனவுகள் இன்றி மரணமாய்

மனம் பிழியும் சுமைகளாய்
என் கவிதைகள் கணக்கிறது
தாள்களை எறித்துவிடுகிறேன்
யாராவது கவிதைகளை
எடுத்து தொலைத்துவிடுங்களேன்

பெண்மையை காயப்பட்ட பொழுதுகளிலும்
எனை இமைக்குள் இருத்தியவளே
தேவதைகளின் கண்ணீர் துளிகள்
பூமிக்கு சாபங்களாம்
சபிக்கப்பட்டவனாய் நானும் தோழி ...


கோமாளி மனிதர்கள்

சாலையின் காற்றில்
வயிற்றின் பதிலுக்காய்
கயிற்றில் நடந்தவனின் உழைப்பை
சில்லறையோடும் கைத்தட்டல்களோடும்
கோமளிகள் என கடந்த மனிதர்கள்
சாலையின் சப்தத்தில்
மௌனமாய் ஜனித்தபடி
பிச்சையெடுத்த உருவத்தின் முன்பாய்
சாமியென மண்டியிட்டார்கள்
கோமாளி மனிதர்களாய்
.....

அட்சய கவிதையாய் நீ!

கேள்விகள் கேட்கிறயாய்
நம் திருமணத்திற்கு பின்பு
காதல் கவிதைகள் எங்கேயென ?
காதல் தீர்ந்ததா ?
காதலித்தவன் தொலைந்தானா என ?
அட்சய பாத்திர சொந்தக்காரனுக்கு
எப்பொழுதும் பசிப்பதில்லை
என் காதல் தேவதையே ...

எந்தன் கனவுகளை கடைபரப்பி
மனிதர்களை தேடிய பொழுதுகளில்
கனவுகளை தொலைத்து போனேன்
மனிதர்கள் -எனை
மறந்தும்,தொலைந்தும் போகையில்
கனவுகள்
நெஞ்சோடு மூட்டை மூட்டையாய்
ஆஹா
கனவுகளோடு இனி நான்..
.

சர்க்கஸ் சிங்கங்கள்

சுற்றி நின்று
ஆர்பரித்த கூட்டத்தின் இரைச்சல்
விசிலடித்து சப்தமிட்ட மனிதர்கள்
தூரத்தில் அழுத குழந்தை
எதுவும் சலனப்படுத்தவில்லை
சிங்கத்தின் பிடரி காதுகளுக்குள்
சுள்ளென்று முதுகில்
விழுந்த சாட்டையடி பொழுதுகளில்
பழகிய வித்தையை விளையாட்டுன காட்டி
மீண்டும் கூண்டுக்குள் அடங்கியது
மனிதர்கள் மீதான வன்மத்தோடு...

பத்திரிக்கை தர்மம்

அப்பத்திரிக்கையின்
முதல் பக்கத்தில் நடிகன்
நடுப்பக்கத்தில்
நடிகையின் தொப்புள் தரிசனம்
இடைஇடையே- கிரிக்கெட்டின்
சில வெற்றிகளும் , பல தோல்விகளும்
சமையல் குறிப்புகள்
நகைச்சுவை படத் தோரணங்கள்
வாங்கிவிட்டீர்களா
கூவி அழைக்கும் விளம்பரங்கள்
மிக முக்கியமாய்
அரசியல் கோமாளி அறிக்கைகள்
போனால் போகட்டும்மென
கடைசி பக்க ஓரங்களில்
" இலங்கை அகதி வாழ்க்கை" என
பக்கம் நிரப்பும் கட்டுரை ..



****** வார இதழ்கள் அவ்வளவாய் படிப்பதில்லை.எதிர்பாராமல் சென்ற வார குங்குமம் பத்திரிக்கை பார்த்த பின்பு தோன்றியது. *****

உயிர்ப்பாய்

இறக்கை கட்டிப்பறக்கும்
நம் அலுவல் நேரத்தில்
வள்ளுவன்,வாசுகியாய்
நாமென்றும் இல்லை
கிளம்பும் நேரத்தில் சண்டைகளுடன் நானும்
திரும்பும் நேரத்தில் சோர்வாய் நீயும்
வார விடுமுறை நாட்களும்
துணிகள் துவைத்தும்
விட்டு போனவைகளை முடித்தும்
தொடங்கி விடுகிறது திங்கட்கிழமையாய்
இடையே எப்பொழுதாவது
அலைபேசியில் சத்தமிடும்
உன் "ஐ லவ் யு" குறுஞ்செய்திகள் தான்
இன்னும் உயிர்ப்பிக்கிறது
என்னையும் ! நம் காதலையும்...

தோழமைகளுக்கு,

மிக நீண்ட இடைவெளியுடன் உங்களை சந்திக்கிறேன்.திருமண சந்தோசம்,அலுவலக வேலை மற்றும் புதுவீட்டில் இண்டர்நெட் கனெக்ஷன் எடுப்பதற்கு சற்று காலதாமதம் போன்ற காரணத்தால் பிளாக் பக்கம் வரமுடியவில்லை.
அலுவலகத்தில் சில பிளாக் சைட் மட்டும் பார்க்க முடியும் ஆனால் கமெண்ட்ஸ் போட முடியாது. மன்னிக்கவும்.இனி என்னால் முடிந்தவரை முயற்ச்சிக்கிறேன் அத்தனை தோழமைகளுடனும் தொடர்ந்து பயணிப்பதற்கு.

தொலையட்டும் கடவுள்

நீண்ட வரிசையில்
விளையாடி தாகமெடுத்த குழந்தைக்கு
தண்ணீர் தர மறுத்து
கடவுளை காண படியேறும் பக்தன்
கடவுள் உள்ளிருப்பானா
கோவில் எனும் கூடாரத்தில்...

அழகிய சாபம்

காதலிப்பதும்

காதலிக்கப்படுவதும் வரம்களாம்
சொல்லடி செல்ல பிசாசே
உனை காதலிப்பது வரமா
எந்தன் அழகிய சாபமா ??

ஆணவ சந்தோசம்

நாம் பயந்தபடி

திருட்டுதனமாய் காதலித்த இடங்களில்
ஆணவமாய் நின்று சிரிக்கிறேன்
உன் கணவனாய்...

வெட்கங்களா? ஆடைகளா?

தயவுசெய்து

உன் வெட்கங்களை களைந்து
நீ மட்டும் வா
நான்
உன் வெட்கங்களை களைவதர்க்குள்
நீ
உன் ஆடைகளை சரிசெய்துடுகிறாய்
என்னதான் செய்வது சொல்லடி...

தித்திக்கும் பாப்கார்ன்

திரையரங்கின் இருட்டில்
உன் இதழ் கடந்த
பாப்கார்ன் தித்திக்கிறதே எப்படியடி?

சரி சரி வெட்கப்படாதே
அப்புறம் நீயும் இனித்திடுவாய்
திகட்டாத தித்திப்பாய்
...

பொல்லாத கொலுசுகள்

நம் தனியறையில்
உன் கன்னங்கள் சிவக்குமுன்பே
சின்ன சின்னதாய் சிணுங்கி
வெட்கங்களை சத்தமிடும்

பொல்லாத கொலுசுகளை

கொஞ்சம் சும்மா இருக்க சொல்லடி...

தேவதை

யார் சொன்னது
தேவதைகள் பூமிக்கு வருவதில்லை என

இதோ அருகில்
என் தேவதை
மனைவியாய்

இனிதாய் நடந்ததது எங்களின் திருமணம்

கடந்த ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி/09 இரு வீட்டார் சம்மதத்துடன் உறவுகளின்,நட்புகளின் வாழ்த்துக்களுடன் என் தேவதையின் கரம் பிடித்தேன் இறைவனுக்கு நன்றிகள் பல. 6வருடங்களாய் காத்திருந்த எங்களின் காதல் வெற்றியாய் திருமணம் நடந்தது.

சின்ன சின்ன மனக்கசப்புகள்,ஆராவாரம்,பயங்கள் இருந்ததால் நீண்ட நாட்களாக எதுவும் செய்ய இயலவில்லை.பிளாக்
பக்கமும் வரமுடியவில்லை.காத்திருந்த,எதிர்பார்த்த தோழமைகளுக்கு நன்றிகள் பல.

நன்றியை நேரில் சொன்னால் உறவுகள் உரிமையாய் கோபித்து கொள்வார்கள்.அதற்காகவே இங்கே இந்த பதிவிடுகிறேன்.
திருமணத்தை நடத்தி வைத்த ,தோள் கொடுத்த வீட்டு உறவுகளுக்கு மனமார்ந்த நன்றிகளையும்,சந்தோச கண்ணீர் துளிகளையும் பாதங்களில் சமர்ப்பிக்கிறோம்.




தலைப்பில்லா கவிதைகள்

தலைப்பில்லாத கவிதையாய்
நீயும் நானும் இங்கே
அங்கீகாரம் இல்லாததாலயே
அலைக்கழிப்பாய் நம் காதல்

யார் யாரிடமோ
அங்கீகாரம் கேட்டபடி
திசை தெரியா பறவைகளாய்
காத்து நிற்கும் தருணங்களில்
நம் காதலும்
வெட்கப்பட்டதடி அவமானத்தால்

என்னதான்
எதிர்பார்ப்புகள் இவர்களுக்கு என
கேள்விகள் கேட்பவளே
அது தெரியாமல் தானே
குருட்டு மனிதன்
ஓவியம் வாங்கும் அவலமாய்
உன்னோடு நானும்

சத்தமின்றி
முத்தமிட்டு சென்றவளே
சத்தமாய்
உறவுகளிடம் பேசாததுதான் தவறோ

மழலையாய்
நீ ஸ்பரிஷத்த நிமிடங்கள்
நீண்ட இரவுகளில்
கண்ணீரோடு நனைகிறதடி தலையணையில்

கல்யாண மாலைகளுக்கு
பூத்தொடுக்க மறுப்பவர்கள்
காதலர் கல்லறைகளுக்கு மட்டும்
மலர் வளையங்களுடன் தயாராய்...


கண்ணீர் தூதாய்

மௌனமாய் அழுதபடி
முகம் பார்க்க முடியா

தூரங்கள் தொலைவாய்
காத்திருக்கும் தேவதைக்கு
கண்ணீர்துளிகள் காதல் தூதாய்
கனவுகளில் நீங்களாவது
தேவதையிடம் சொல்லிவிட்டு வாருங்கள்
இன்னும் உயிரோடுதான் இருக்கிறான் ஜீவன்
கையாலாகதவனாய் கவிதைகள் கிறுக்கியபடி...

மரணத்தில் புன்னகையாய்

மரணப்படுக்கையின்
கடைசி நிமிடங்களிலும்
பூத்திடும் புன்னகைக்கு சொந்தக்காரியே
காதலோடு ஒரு வேண்டுகோள்
உன் இறுதிப்பயணத்தில்

வெறும் பார்வையாளனாய்
மட்டும்
எனை விட்டு செல்லாதே
நீயின்றி என்ன செய்வேனடி
இங்கே
ஜீவனை தொலைத்த ஜீவனாய...

கனவுப்பூக்கள்

சிறு குழந்தைகளாய்
மணல் வீடு கட்டி

கனவுச்செடிகள் நட்டோம்
கனவுப்பூக்கள் பூக்கையில்
பூக்களை பறிக்காமல்
வேரை பறித்தது யாரடி தோழி...


மையப்பூமி நீயடி

நீ
அருகில் இல்லாத நிமிடங்களில்
உனை மறந்ததாய்
கண்ணீரோடு கோபங்கள் கொண்டாய்
எங்கே எப்படி சுற்றினாலும்
நான் சுற்றும்
மையப்பூமி நீதானடி தேவதையே
...

நானாய் சுயம்பாய்

அடேய்! நான் என்பவன்
கலங்கினானே ஏனடா தோழா

முத்தெடுக்க பிறந்தவன்
தவளையின் கதறல்கள் கேட்டா
உன்னுள் கலங்கினாய் நீ

விண்ணாளும் இராஜாளி
சிட்டுகுருவி சிறகொடிதல் கண்டா
கண்ணீரில் முழ்கினாய் நீ

போர்க்கள படைத்தளபதி
இரத்தகறை பார்த்தா
வாளை துக்கி எறிந்தாய் நீ

காற்றின் விண்மீன்
மிரட்டிய சுறாவளி கண்டா
விண்மீனாய் மாறினாய் நீ

மரணத்தின் வலி கண்டு
கனவுகள்,காயங்களோடு மீண்டவன்
அத்தனை சுலபமாய்
வீழ்த்திட முடியாது என்னை
இதோ இந்த கணம்
நான் என்பவன் போரிட தயார்

நான் என்பவன் சுயம்பு
கவனிப்பாரற்று ஒதுங்கி கடந்தாலும்
நானாய் முளைப்பேன் சுயம்பாய்...